ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலத்தின் புகைப்படத்தை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 1,315 மீட்டர் நீளத்தில் 17 இடைவெளி பகுதிகளைக் கொண்ட ரயில்வே பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பாலத்தின் மொத்த நீளத்தில் 476 மீட்டர் ஆற்றின் மீது கட்டப்பட்டுவருகிறது. பாலத்தின் அதிகபட்ச உயரம் கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது. பிரான்சில் உள்ள ஈஃபில் டவர் உயரம் 304 மீட்டர். இதன்மூலம் இந்த ரயில்வே பாலத்துக்கு உலகின் மிக உயரமான கட்டுமானம் என்ற பெருமை கிடைத்துள்ளது.
ரூ.1,250 கோடி மதிப்பிலான இந்தப் பாலம் 266 கிமீ வேகத்தைத் தாங்கக் கூடியது. மேலும் இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் புகைப்படத்தை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.