கோவை, அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை, நபர் ஒருவர் காலால் உதைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசி, அவர் மீது தண்ணீரைக் ஊற்றித் விரட்டி அடித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்ற முதியவர், வறுமையின் காரணமாகச் சாலையோரங்களில் யாசகம் எடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காலில் ஏற்பட்ட பலத்த காயத்துடன், பசியைப் போக்கிக் கொள்ள வழிதேடி கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நடைபாதைப் பகுதிக்கு வந்து உள்ளார்.

அங்கு இருந்த நபர்களிடம் கையேந்தி உதவி கேட்டு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர், காயத்துடன் கையேந்தி வந்த அந்த முதியவரிடம் சற்றும் மனிதநேயமின்றி நடந்து கொண்டு உள்ளார்.
அம்முதியவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், அவரைத் தனது காலால் எட்டி உதைத்து உள்ளார். அத்துடன் நிற்காமல், முதியவர் மீது இரக்கமின்றி தண்ணீரையும் ஊற்றி, அங்கு இருந்து அவரை விரட்டி உள்ளார்.
வயிற்றுப் பசிக்காகவும், காயத்தின் வலியினாலும் துடித்து உதவி கேட்டு வந்த ஒரு முதியவரிடம் இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் இடையேயும் சமூக ஆர்வலர்கள் இடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பசியால் வாடும் எளிய மனிதர்களிடம் இத்தகைய மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் நபரைக் காவல் துறையினர் உடனடியாகக் கண்டறிந்து, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்களும் கோவை மக்களும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




