• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தாலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது!

Byகாயத்ரி

Nov 6, 2021

ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களால் தலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஆப்கனில் தலிபான் மற்றும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை குறி வைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில், 90 பேர் பலியாகிஉள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கூறியுள்ளதாவது:இரு மாதங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆப்கனில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது, அந்த அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதை காட்டுகிறது.

இது, தலிபான் ஆட்சிக்கு ஆபத்தானது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கன் அரசுக்கு எதிராக போர் புரிந்து வந்த தலிபான், தற்போது சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற ஐ.எஸ்., பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஓராண்டிற்குள் ஐ.எஸ்., அமைப்பு, ஆப்கனுக்கு மட்டுமின்றி பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக உருவெடுக்கும். ”ஐ.எஸ்., அமைப்பை சமாளிப்பதை பொறுத்து, தலிபானை உலக நாடுகள் எடை போடும்,” என, அமெரிக்க ராணுவ கொள்கை பிரிவு சார்பு செயலர் கோலின் காஹ்ல் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.,சுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுத்த தலிபான், தற்போது அதற்கான விலையை கொடுக்க வேண்டியுள்ளது.சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை தலிபான் பெற வேண்டுமெனில், உள்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதற்கு, பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க வேண்டும். தலிபானுக்கு இனிதான் சோதனைக் காலம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.