தான்சானியாவில், விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் ப்ரிசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நேரத்தில், மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் விமானம் விழுந்து மூழ்கத் தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு தான்சானியாவில் சஃபாரி நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.