• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்..,

ByP.Thangapandi

Aug 4, 2024

உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக – ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் துவங்கி, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமண விழா மற்றும் இறுதியாக இறந்த பின்னும் தாய்மாமன் கொடியாக ஒரு செம்பு நீரை இறந்த உடலுக்கு ஊற்றி இறுதி மரியாதை செய்த பின்பே நல்லடக்கம் நடைபெறும், என்ற வகையில் இன்ப, துன்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

இதற்காக அவர் தன் உழைப்பில் சேகரிக்கும் 70% பணத்தையும் சீதனமாக கொடுப்பதாக கூறப்படுகிறது, இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கின் போது தனது விதை நெல்மணியையும் தங்கை குழந்தைகள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சீதனமாக அளிப்பது வரலாறு, இந்த தாய்மாமன் பங்களிப்பை அறிந்த பெண்கள் யாரும் சொத்திற்காக சண்டையிடுவது இல்லை எனவும் தாய்மாமன் செய்யும் சீதனமே போதும் என பெருமையோடு அவர்களை வணங்குவார்கள் என கூறப்படுகிறது.

அவ்வாறு தாய்க்கு நிகராக உள்ள இந்த தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18 தினத்தில் தனது மொத்த பங்களிப்பையும் தரும் தாய்மாமனுக்கு மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள், அவர்களை வணங்கி தாணியங்களை வழங்கி வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திருவிழா இன்று எட்டாவது ஆண்டாக உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்ப சாமி கோவிலில் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்மார்கள் பெற்று ஆடி பெருக்கில் விதை விதைப்பிற்காக எடுத்து சென்றனர்.

இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தென்னிந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன் மற்றும் பார்வட் ப்ளாக் கட்சி தலைவர்களும் பங்கேற்று தங்களது தாய்மாமன்களுக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர்.