மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயான பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ளனர்.

5% குப்பைகள் மட்டுமே உரமாக்கப்படும் சூழலில் 95 % குப்பைகள் எரியூட்டப்படுவதாகவும், இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டி, குப்பை கொண்ட வந்த நகராட்சி வாகனத்தை சிறை பிடித்த பொதுமக்கள், நகராட்சி ஊழியர்களையும் மின் மயான வளாகத்திலேயே வைத்து பூட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை விடுவித்த சூழலில், இந்த தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குப்பைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தீ வைக்கும் நபர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும், முறையாக குப்பைகளை தரம்பிரித்து உரமாக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்., இதனடிப்படையில் பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.










