திண்டுக்கல் நாகல்நகர், ரவுண்டானா உட்பட பல இடங்களில் வீதி வீதியாக சென்று ஐ பி செந்தில்குமார் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் நாகல் நகர் பகுதியில் சாலைகளில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது திண்டுக்கல் புகழ்பெற்ற ஜிலேபி கிருஷ்ணய்யர் கடை உரிமையாளர் வேட்பாளருக்கு ஜிலேபி ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார். பின்பு அவர் சௌராஷ்டிராபுரம் பகுதியில் சென்ற போது அங்கு ஒரு சிறுமி சிலம்பம் சுற்றி அவருக்கு வரவேற்ப்பளித்தார். அப்போது பேசியதாவது:
நெசவாளர்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வரானவுடன் தீர்த்து வைக்கப்படும். உங்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்.

அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் நலம் பெற வேண்டும் என்பதற்காக ரூ.8000 மதிப்புள்ள கூப்பனை உங்களுக்கு அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராக திண்டுக்கல் இருந்த போதும், எந்த வளர்ச்சியும் காண முடியவில்லை. உங்கள் பிரச்சனைகளை கேட்பதற்கு நான் தனி அலுவலகம் திறப்பேன். அங்கு நீங்கள் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். அதற்கு தீர்வு காணப்படும். நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். உங்களுடனே நான் இருப்பேன்.
உங்களுக்காகவே நான் சேவை செய்வேன். வருகின்ற தேர்தலில் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த எனக்கு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். அவருக்கு கூட்டணி கட்சியினர் வழிநெடுக வரவேற்பளித்தனர்.






