சேலம் 4வது நீதித்துறை நடுவராக இருப்பவர் பொன்பாண்டி. இவர் இன்று காலை வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு வந்து, தனது அறையில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினார்.
வெளியே இருந்த 2 அலுவலக உதவியாளர்கள் உள்ளே செல்லாமல் நின்று கொண்டிருந்தனர். நீண்டநேரம் அவர் அழைப்பு விடுத்தார். அப்போது, ஓமலூரில் இருந்து சேலம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட ஊழியர் பிரகாஷ் உள்ளே சென்றார். அந்நேரத்தில், நீதிபதி வெளியே திடீரென வேகமாக ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் ஏன் வெளியே ஓடி வருகிறார் என தெரியாமல் திகைத்து நின்றனர்.மாஜிஸ்திரேட் பொன்பாண்டி, போலீஸ் போலீஸ் என அழைத்தார். அங்கு பெண் போலீஸ் மட்டுமே இருந்தார். அவரிடம், தன்னை கத்தியால் குத்த வருகிறார் என சத்தம் போட்டார்.
இதனை பார்த்த அந்த பெண் போலீஸ் அங்கு கத்தியுடன் வந்த பிரகாசை பாய்ந்து சென்று பிடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஊழியர்களும் அவரை பிடித்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு பிரகாசை கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நீதிபதி விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் நீதிமன்றத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நீதிமன்ற ஊழியர் எதற்காக கத்தியோடு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணி மாறுதல் விவகாரத்தில் ஊழியர் பிரகாஷ் இந்த செயலில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.