2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல், 2027-ஆம் ஆண்டு டிசம்பர் வரை பதவிக் காலம் உள்ள நிலையில், கடந்த 8-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதை அடுத்து இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியானதை தொடர்ந்து, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் இன்று பதவியேற்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களவை தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு வெளியாகிறது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.