மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
பெரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா செல்லும் வழியில் சென்னை அருகே நிலை கொண்டு சென்னையை மிகக்கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. புயல் காரணமாக பெய்த அதிகனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி மேடான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
மாநகராட்சி பணியாளர்களும், அதிகாரிகளும் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சிகளில் முனைப்புடன் இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையின் கீழ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது மழை விட்டு வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கும் நிலையில் நேரடியாக முதல்வர் ஸ்டாலினும் களத்தில் இறங்கியிருக்கிறார். இன்று காலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் நலம் விசாரித்தார்.
அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பல்வேறு பகுதிகளையும் முதல்வர் நேரில் சென்று பார்வைக்கு ஆய்வு செய்கிறார்.