• Sat. Apr 27th, 2024

திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து

ByKalamegam Viswanathan

May 29, 2023

திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே 2பேர்பலியானார்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (47). இவரது மகன் பூரணசந்திரசேகர் (25). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நேற்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்காக பூரணசந்திரசேகர், அவரது தந்தை கணேஷ்பாபு, தாயார் மகேஸ்வரி (41) மற்றும் இவரது உறவினர்கள் முத்துலட்சுமி (49), சதீஷ்குமார் (9) ஆகியோர் ஒரு வாடகை காரில் கோயம்புத்தூர் சென்று விட்டு, நிகழ்ச்சி முடிந்த பின்பு மீண்டும் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வண்டியை சிவகாசியைச் சேர்ந்த ஓட்டுநர் வெற்றி (25) என்பவர் ஓட்டி வந்தார். ஓட்டுநரின் நண்பர் வீரபாண்டி (45) என்பவர் வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

இன்று காலை விருதுநகர் அருகேயுள்ள ஜி.என்.பட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வெற்றி, முன் இருக்கையில் அமர்ந்து வந்த வீரபாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்தவர்களும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *