கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரானா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்று மாலை நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள், எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள், ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்
“வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பொது மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள், மற்றும் எஸ்டிபிஐ கட்சி போன்றவற்றிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆதரவளிக்கும். தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டும் படியாக உள்ளன, குறிப்பாக கொரானா தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற பல்வேறு செயல்பாடுகள் பாராட்டும்படியாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்குப் பதிவு செய்தது சரியானதாக இருந்தாலும் அவரை தனிப்படை அமைத்து கைது செய்தது சரியல்ல. மத அரசியல், மக்களைப் பிளவுபடுத்தும் பேச்சுக்களை பேசி வரும் இந்துத்துவா அமைப்பை சார்ந்தவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் ஜார்ஜ் பொன்னையா மீது மட்டும் எடுப்பது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.