சிவகங்கையின் ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரியின் 226 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், காளையார் கோவிலில் அவரது திருவுருவ படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயத்திற்கு மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் விருப்பப்படி கோயில் தேர் அமைத்துக் கொடுத்தவர் குப்பமுத்து ஆசாரி. அவரின் விருப்பப்படி தேரோட்டம் அன்று ஒரு நாள் மன்னராக குப்பமுத்து ஆசாரி அறிவிக்கப்பட்டார். அவர் தேரோட்டத்தில் தேரில் அமர்ந்து வந்த மன்னர் குப்பமுத்து ஆசாரி, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய தேரில் இருந்து கீழே விழுந்து தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அவர் உயிர் நீத்த ஜனவரி 23ஆம் நாள் குருபூஜை விழாவாக சமுதாய மக்களால் போற்றப்பட்டு வருகிறது. இன்று குப்பம் முத்து ஆசாரியின் 226 ம் ஆண்டு குருபூஜை விழா காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் ஆலயம் எதிரே அமைந்துள்ள திடலில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், அச்சமுதாய மக்களும் குப்பமுத்து ஆசாரியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரிக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் எனவும், அவரது நினைவு தினத்தை அரசு விழாவாகவும், தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.