இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர் வேலு நாச்சியார். வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.
தவெக தலைவர் விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.