புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான ஆசிரியர்களுக்கு இன்று ஒரு தொகுதிக்கு ஓர் இடம் என்கிற வகையில் ஆறு இடங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கியில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. அந்த டப்பாவை திறந்து பார்த்தபோது வெறுமனே 150 கிராம் கூட இல்லாத அளவுக்கு சோறு வைத்திருந்தார்கள். அதை திறந்து பார்த்த ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறு குழந்தைகளுக்கு கூட இந்த உணவு பத்தாது பெரியவர்களுக்கு எப்படி இந்த உணவு போதும்? சோறு வழங்க முடியவில்லை என்றால் நாங்கள் விருப்பப்பட்ட இடத்தில் போய் சாப்பிட்டு விட்டு வந்திருப்போம்.
இந்த உணவு எப்படி சாப்பிடுவது என்று ஆசிரியர்கள் புலம்பினார்கள். அந்த டப்பாவில் இருக்கும் சோறு மற்றும் தொட்டுக் கொள்ள வைத்திருந்த கூட்டு ஆகியவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.



