ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்து கொண்டு குடும்பத்தினர் போல நடந்துகொண்டால் எந்தப்பிரச்சனையும் இருக்காது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி நடக்கக்கூடாது, நடந்துவிடக்கூடது என முன்னாள் டிஜிபி ரவி பேட்டி.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை இயக்குனராகவும், தாம்பரம் காவல் ஆணையருமாக பதவி வகித்த ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நர்சிங் பயின்று முடித்த மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முன்னாள் காவல்துறை தலைவரான ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,
கள்ளக்குறிச்சி சம்பவம் போல அசம்பாவித சம்பவம் இனி நடக்காது என்று நம்புவோம். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து காவல்துறை ஒரு விசாரணை குழு அமைத்துள்ளது. நீதிமன்றம் இதைப் பற்றி கருத்து கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் போல இனி ஒரு சம்பவம் எந்த ஒரு இடத்திலும் நடக்கக்கூடாது, நடைபெற விடக்கூடாது. தமிழக உளவுத்துறை பிரிவு தோல்வியடைந்ததாக கூறுகிறார்களே என்பது குறித்த கேள்விக்கு,
இதில் ஒரேயொரு பிரிவை மட்டும் குறை சொல்லக்கூடாது.
என்ன நடந்தது எப்படி நடந்தது திடீரென்று எப்படி வந்தார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிச்சயமாக உளவுத்துறை முதலிலேயே தகவல் சொல்லி இருப்பார்கள். 32 வருடங்களாக நான் காவல்துறையில் இருப்பதால் அது எனக்கு நன்றாக தெரியும். மாணவிகள் படிக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது நம்முடைய நோக்கம் அல்ல. நம்மால் படிக்க முடியவில்லை என்றாலும், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்றாலும், நீட் தேர்வில் தேர்வடைய முடியவில்லை என்றாலும் நம்பிக்கையை விடக்கூடாது, மனம் தளர்ந்து விடக்கூடாது. பெற்றோர்கள் முதல் மதிப்பெண் எடுங்கள் என கட்டாயப்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் சரிவர கவனக்குறைவாக படிக்கிற மாணவர்களை புரிந்து கொண்டு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மாணவர்களை திட்டுவதோ மற்ற மாணவர்கள் முன்பு திட்டியோ அவமானப்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை உளவியல் முறைப்படி தெரிந்து கொண்டு தங்களுடைய குடும்பத்தினர் போல பாவித்து செயல்பட்டால் நிச்சயமாக எந்த பிரச்சினையும் இருக்காது. மாணவிகள் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என பேசினார்.