• Wed. Apr 24th, 2024

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு..!

Byவிஷா

Sep 3, 2022
வருகிற 10ஆம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வானது மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. 
முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். முன்னதால் இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனும் நிலை இருந்தது. தற்போது  அந்நிலை மாற்றப்பட்டு ஆயுள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு இருந்து தேர்வு எழுதியவர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. மேலும் தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.  அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2.30 லட்சம் பேர், தாள் 2-க்கு 4.01 லட்சம் பேர் என மொத்தமாக 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் பின்பு ஒத்தி வைக்கப்பட்டு,  செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ஒத்தி வைக்கப்படுகின்றது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *