தமிழ் நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கு முந்தையது என பெரியார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில்..,
தேசிய அளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளதோடு மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து சுமார் 100 கோடி அளவிற்கு பண உதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அகில இந்திய அளவில் ஆன்லைன் கல்வி கற்பிக்கவும், வெளிநாட்டவர்களுடன் பிராஜெக்ட் செய்தல், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி வெளிநாட்டு மாணவர்களை பல்கலையில் சேர்க்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெகநாதன், பெரியார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மூலம் தமிழர் நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டறிந்துள்ளதாகவும்;, 40 சதவிகித ஆராய்ச்சி ஆரோக்கியம் சார்ந்தே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக கேன்சர் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, கட்டுப்படுத்தும் எலக்ட்ரானிக் நோஸ் கருவியை கண்டுபிடித்து உள்ளதாக குறிப்பிட்ட அவர் வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட பெரியார் பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.