விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அருகே உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்ப நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கையில் கரும்புகளுடன் தரையில் அமர்ந்து படுத்துருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வானூர், காட்ராம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கும் கரும்புகளை லிங்கா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இரண்டு வருடமாக ஆலை மூடப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு மாவட்டம் பட்டாளத்திற்கு கரும்புகள் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் படாளம் கொண்டு செல்லப்படும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகன வாடகை அதிகமாக செலவாகுவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறினர்.
எனவே விழுப்புரம் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப நடவடிக்கை எடுக்ககோரி கரும்பு விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கரும்பு விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் விரும்பும் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்ப உத்தரவிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.