• Thu. Apr 18th, 2024

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

மதுரை மாவட்டம் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் நடத்தப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில்
”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:-
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 2023-2024-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.மதுரை மாவட்டத்தில், முதற்கட்டமாக 01.06.2023-அன்று மதுரை கிழக்கு,மேலூர், கொட்டாம்பட்டி தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி , சேடப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 9 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.07.2023-அன்று அலங்காநல்லூர், திருமங்கலம் மதுரை மேற்கு மற்றும் வாடிப்பட்டி ஆகிய 4 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கென ஊராட்சி , பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சிமன்ற தலைவர், பேரூராட்சி த்
தலைவர், பள்ளித் தலைமையாசிரியர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புபகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும். தலைமையாசிரியர் இக்கூட்டத்தினை, கூட்டி சமையல் செய்திடும் இடம் வைப்பறை, மின்சாரம் , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, சமையலர் தேர்வு தானிய வங்கி அமைத்து ரொக்கத்தை தவிர்த்து அரிசி பருப்பு , சிறுதானிய வகைகள், காய்கறிகள் , எண்ணெய் போன்றவைகளை நன்கொடையாக பெறுதல் 13 வகையான அங்கீகரிக்கப்பட்ட உணவு வகை முறையாக தயார் செய்து வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும்.மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும் குறைந்தபட்சம் கல்வி தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராயிடு மொபைல் போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் குழுவில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியவராகவும் தகுதி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *