பல்லடம் அரசு கல்லூரியில் மாணவர் ஒருவர் விஷம் குடித்தது தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் திட்டியது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் 44. வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவருக்கு பத்மா என்ற மனைவியும் காசி விஸ்வநாதன் 18 என்ற மகனும் உள்ளனர். காசிவிஸ்வநாதன் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவன் காசி விஸ்வநாதன் அங்கு நடைபெற்ற மாதிரி தேர்வின் போது வெற்று காகிதத்தில் ஆபாச வார்த்தைகளை எழுதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்த துறை தலைவர் பாலமுருகன் மாணவனிடமிருந்த பேப்பரை பறித்துக் கொண்டு கல்லூரியை விட்டு விரட்டிவிட்டதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்பு நடந்த இச்சம்பவத்தால் தலைகுனிவை சந்தித்த அம்மாணவன் அங்கிருந்து வெளியேறி ரோட்டோர பூச்சி மருந்து கடையிலிருந்து விஷ மருந்து பாட்டில் ஒன்றை வாங்கி குடித்து விட்டு இது குறித்து தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அம்மாணவனை மீட்ட சக நண்பர்கள் பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல்லடத்தில் அரசு கல்லூரி துறைத் தலைவர் அடித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.