


தமிழகத்தில் சுமார் 1500 கிரஷர் மற்றும் குவாரிகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கிரசர் மற்றும் கல்குவாரிகள் உள்ளன. இதன் மூலம், நேரடியாக 1000 பேருக்கும், மறைமுகமாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கிறது. இந்நிலையில், குவாரிகளில் இருந்து கல் உடைத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு, தமிழக அரசுக்கு வரியாக இதுவரை கனமீட்டர் அடிப்படையில் இருந்தது.

கடந்த 5.9.2023 அன்று ஒரு யூனிட்டுக்கு ரூ.330 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வழங்கப்பட்டது. இதை மாற்றி, கடந்த மார்ச் 12-ம் தேதி ரூ.604 மற்றும் ஜிஎஸ்டி என்று உயர்த்தப்பட்டது. தற்போது மெட்ரிக் டன் முறையில் ரூ.1347 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து கனிமவளத்துறை மூலம் வசூல் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் ஏறும் விலை உயர்வு காரணமாக சாதாரண மக்களின் வீடுகட்டும் எண்ணம் கனவாக மாறியுள்ளது.

கட்டுமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் கட்டண சிறு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய கட்டண முறையான 1 யூனிட்டுக்கு ரூ.330 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வழங்கும் தொகையை அரசு பெற வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, கரூர் மாவட்டத்தில் கிரஷர் மற்றும் குவாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

