திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு, இன்று பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம் கைனுார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.இவ்வழக்கில், 2021 அக்டோபரில் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அப்போது, தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்றும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திருமுருக தினேஷ், நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவது போலாகும்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் சிலை அமைக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதற்கு, மாவட்ட கலெக்டர் மற்றும் உள்துறை செயலரிடம் இருந்து விளக்கம் பெறும்படி, கூடுதல் அரசு பிளீடர் எம்.ராஜேந்திரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.