• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி..,அதிகமான பெண்கள் சிலம்பம் சுழற்றி அசத்தல்

BySeenu

Jul 15, 2024

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இரண்டாவது தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிலம்பம் தலைமை பயிற்சியாளர் நந்தகுமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை,மதுரை,திருச்சி,ஈரோடு,நாமக்கல்,தஞ்சை,கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

நான்கு வயது சிறுவர், சிறுமிகள் முதல் 60 வயதான பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில்,மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிகமாக கலந்து கொண்டனர்.
ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, ஒற்றை சுருள் வாள் வீச்சு,நெடு கம்பு,வேல் கம்பு வீச்சு,வாள் கேடயம்,குத்து வரிசை,அடிமுறை, வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்கும் விதமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இதில் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் கம்புகளை அசத்தலாக சுற்றியது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் நந்தகுமார் தமிழக அரசு சிலம்ப விளையாட்டுக்கென இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதால்,தற்போது சிலம்பத்தை கற்பதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரியில், களரி, அடிமுறை, சிலம்பம், வர்மம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக மையம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கும்,துறை அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.