• Sat. May 17th, 2025

தனது மகனுக்கு மணிமகுடம் சூட்டி, வாக்களித்த மக்களுக்கு மூள் கீரிடத்தை சூட்டி உள்ளார் ஸ்டாலின்…

ByKalamegam Viswanathan

May 8, 2025

கடந்த நான்காடுகளில் செய்த சாதனை திட்டங்களை கேட்டால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்த சாதனை திட்டங்களை விமர்சித்து, வாயாலே வடை சுடுகிறார் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழக அம்மா பேரவை சார்பில், ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 13வது வார திண்ணை பிரச்சாரம் நடைபெறுவதை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது..,

இன்றைக்கு கைலாசத்தில் இருக்கிற கயிலை நாதர், மதுரையிலே திருக்கல்யாணம் மீனாட்சி அம்மனை மணம் முடிக்கிற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்றைக்கு உங்களை எல்லாம் சந்திப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்

எடப்பாடியார், திமுக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்துள்ளது என்று கேட்டால், அதற்கு ஸ்டாலின் இந்த நான்கு ஆண்டுகள் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும், அதை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் புரட்சிதலைவி அம்மா தமிழ் இனம் தலைநிமிர்ந்து நிற்பதற்காக தன்னை அர்ப்பணித்து, ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய குலசாமியாக இன்றைக்கும் இதயங்களில் நிறைந்து இருக்கிறார் புரட்சித்தலைவி அம்மா .

தமிழகத்தை மீட்டெடுத்து, ஜனநாயகத்தை மலர செய்வதற்காக ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்காக உழைத்துக் கொண்டு வரும் எடப்பாடியார், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த மகத்தான திட்டங்களை தந்தார். .இந்த திட்டங்களை மூடி மறைக்கும் மோடி, மஸ்தான் வேலை போல ஸ்டாலின் செய்கிறார். கடந்த நான்கு ஆண்டுகள் என்ன சாதனை? என்ன செயல் திட்டம் ? என்பதற்கு சொல்ல யோகிதை இல்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைத் திட்டங்கள் தான் ஸ்டாலின் கண்ணை உறுத்துகிறது.

குறிப்பாக 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் மிக்சி, கிரைண்டர் திட்டம், கிராமபுற மக்களுக்கு கறவைமாடுகள், ஆடுகள் திட்டம் என கொடுத்த வாக்குறுதிகளை மகத்தான திட்டங்கள் மூலம் தந்ததால் தான் 2016 ஆம் ஆண்டில் 234 தொகுதிகளும் இரட்டை இலை சின்னத்தில போட்டியிட்டு வெற்றி பெற்று, மீண்டும் புரட்சி தலைவி அம்மா ஆட்சியைப் பிடித்தார்.

இந்த பத்தாண்டுகளை குறை சொல்வதற்கு உங்களுக்கு என்ன யோகிதை இருக்கிறது என்று தமிழ்நாட்டு மக்கள் இப்போது கேள்வி கேட்பது உங்களுக்கு தெரியவில்லையா?

கருவறை முதல் கல்லறை வரை புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆட்சியிலே, எடப்பாடியார் ஆட்சியலே செய்த சாதனைகளை ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

சட்டமன்றத்தில உங்கள் சாதனை சொல்வதற்கு பதிலாக, தரைமட்டமாக பத்தாண்டு இருந்தது என்று வாய் கூசாமல் பச்சை பொய்யில் பேசுகீறீங்கள். உங்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் சுபமுகூர்த்த நாளை எதிர்பார்த்து வருகிறார்கள்.

படுபாதகமாக உங்கள் அரசு சவக்குழிக்குள்ளே போயிருக்கிறது என்று மக்கள் பேசுவது உங்களுக்கு தெரிகிறதா ?

எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகும். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றும், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு அம்மாவின் வழியில் எடப்பாடியார் செய்து திட்டங்களை நீங்கள் மூடி மறைத்து, எங்கள் மீது புழுதி வாரி தூற்றுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தொடரட்டும் பல்லாண்டு என இந்த நான்காண்டுகளைப் பற்றி எதுகை, மோனை வசனம் பேசலாம், முதலமைச்சர் வேண்டுமானாலும் வசனம் பேசலாம் நன்றாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையிலே ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையில் இருந்து நீங்கள் செய்ய தவறி வீட்டீர்கள் என்பது தான் மக்கள் குற்றச்சாட்டு.

செய்ய வேண்டிய கடமையில் தவறிருக்கிற இந்த அரசு இனியும் எங்களுக்கு தேவையில்லை, 2026யில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆட்சி மலரும், இதை கழக அம்மா பேரவை தொண்டர்கள் 13 வார திண்ணைபிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

பத்தாண்டு காலம் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று வாயிலே வடை சுட்டுக் கொண்டிருக்கின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய அரசு நிர்வாகத்தில் படுபாதளத்தில் உள்ளது. ஆகவே நீங்கள் மோடி மஸ்தான் வேலை செய்வதை விட்டுவிட்டு, மக்களுக்கு இருக்கிற எட்டு மாதங்களிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியுமா என்று பாருங்கள்.

உங்கள் மகனுக்கு துணை முதலமைச்சர் என மாணிக்க மகுடம் சூட்டி உள்ளீர்கள் ஆனால் வாக்களித்த மக்களுக்கு மூள் கீரிடத்தை தான் நீங்கள் சூட்டி உள்ளீர்கள்.

மகளிர் உரிமைத்தொகை என்று பெருமையாக பேசுகிறீர்கள். அந்த திட்டத்திற்கு உங்கள் தந்தையார் பெயரை வைத்துள்ளீர்கள். அரசு பணத்தில் உங்கள் தந்தையார் பெயரில் திட்டத்தை வைத்துள்ளீர்கள். இதை மக்கள் பார்த்துதான் உள்ளார்கள். நீங்கள் போடுவது மனக்கணக்கு, மக்கள் போடுவது நியாய கணக்கு, அதன் மூலம் எடப்பாடியார்க்கு கிடைக்கும் வெற்றி கணக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் மக்கள் திமுகக்கு புகட்டுவார்கள் என கூறினார்.