இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள திசநாயகே தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனுரகுமரா திசநாயகே வெற்றி பெற்றார். இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாடு பயணமாகத் திசநாயகே எங்குச் செல்வார் என்பது இலங்கையில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் இலங்கை நெருக்கம் காட்டி வருகிறது. அதிலும் தற்போது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திசநாயகே சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் எனத் தேர்தல் பிரசார சமயத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இலங்கையில் இதற்கு முந்தைய அதிபர்கள் தங்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கே வருகை தந்துள்ள நிலையில், புதிய அதிபரும் இதே வழக்கத்தைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தரத் திசநாயகே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை இலங்கை அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் இதனால், தனது முதல் வெளிநாட்டு பயணமாகத் திசநாயகே இந்தியாவுக்கு வருகை தர அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் அனுரகுமரா திசநாயகே இந்தியா வருகை
