அரையாண்டு விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கடந்த 15-ம் தேதி தொடங்கிய அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது.
பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரையில் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரையாண்டு தேர்வை எழுதி முடிக்கும் மாணவ – மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அசைமென்ட்டுகளை மட்டும் வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.