பெங்களூரு விமான நிலையத்தில் ரசாயனம் தடவி கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. அவர் அணிந்திருந்த கைக்கெடிகாரம் மற்றும் பையின் கைப்பிடியில் தங்கத்தை வைத்து, அதன் மீது யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் ரசாயனம் தடவி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பயணியை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரசாயனம் தடவப்பட்ட 299 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான நபர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.