கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,322 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை சமயத்தில் கேரள மாநில அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. அப்போது வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியது குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளாவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகையின்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட, மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கடைகளில் கூடுவதைக் காண முடிந்தது. ஓணம் பண்டிகைக்குப் பின்னரே, அங்கு வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 2 நாட்களாகவே கேரளாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கேரளாவில் 32 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தற்போது 2 லட்சத்து 29 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மேலும் 131 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து புதிதாக 22 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் வைரஸ் பாதிப்பு உயர்வது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது 3ஆவது அலையில் தொடக்கமாக இருக்குமோ என்றும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.