ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 6 பயங்கர தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று அதிரடி காட்டினர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றன. இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்களும் உயர்த்தியாகம் செய்கின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் அனந்த்நாக், குல்காம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதிகளுக்கு தனித்தனியாக இரு குழு பாதுகாப்பு படையினர் சென்றனர். அனந்த்நாக் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படைகள், அவர்களை சரணடையும்படி பலமுறை வாய்ப்பு வழங்கியது.
ஆனால், திடீரென வீரர்களின் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடி கொடுத்த நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இரு இடங்களிலும் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.