நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது.
இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது. ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடை அடைக்கப்பட்ட பின்பு மாளிகப்புரத்தில் குருதி சடங்குகள் நடைபெற உள்ளது. இதன்பின்பு, நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட உள்ளது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது. இன்று நெய்யபிஷேகம் நிறைவு நாள் என்பதால் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.