• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கனமழையால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Byவிஷா

Dec 12, 2024

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், தூத்துக்குடி, திருப்புத்தூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, நாளை தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும், கேரள கடலோரப் பகுதிகளில் நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சில இடங்களில் நாளை (டிச.13) மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.