விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்து இலவச வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தூரிலிருந்து அண்ணாநகர், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, கோபாலபுரம் சல்வார்பட்டி, இறவார்பட்டி வழியாக சுப்பிரமணியபுரம் வரை செல்லும் அரசு பேருந்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அளவுக்கு அதிகமாக ஏறியதால் பேருந்து இயக்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாக ஓட்டுநர் பேருந்தை இயக்க மறுத்து வழியில் நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்திலிருந்த மாணவர்கள் அனைவரும் இறங்கி சாலையில் நின்று கூச்சலிட்டனர் .
பின்னர் காவல்துறையினர் வந்து மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் மாணவர்கள் இந்தப் பேருந்தை விட்டால் அதற்கு அடுத்து பேருந்து எங்கள் ஊருக்கு இல்லை. எனவே இந்த பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகப்படியான பேருந்துகள் பள்ளி நாட்களில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்த பின் மாணவர்கள் மற்றொரு பேருந்து ஏற்பாடு செய்து இரண்டு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.