விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளிமாணவன் ஒருவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் ராஜேஷ் (13). இவர், விளாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்து வந்த ராஜேஷ், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலருடன் சன்னாசிப்பட்டி கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அவரது பெற்றோருக்கும், மாரனேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்மாய்க்கு விரைந்து சென்ற போலீசார், நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.