

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா மற்றும் 59வது குருபூஜை விழா 28.10.2021ல் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஆன்மீக விழா, அரசியல் விழா, அரசு விழா என தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் கிராம பொதுமக்கள் என லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடி வருகின்றனர்.
இன்றைய அரசியல் விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் பசும்பொன் வருகை தந்தார். அவருக்கு பார்த்திபனூரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. டிடிவி.தினகரன் உத்தரவின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்தனர். இதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சசிகலா ஆதரவாளர்களும் அதிமுக கொடியுடன் வந்திருந்து வரவேற்பு கொடுத்தனர்.
இதனையடுத்து பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் எம்.முருகன், ஜி.முனியசாமி ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரம் பேரூர் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
