

புதுச்சேரியில் கல்வி துறையில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்கள் பணி நிரந்தரம் உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆளுநரை கண்டித்து இந்திரா காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கல்வித்துறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரொட்டி பால் திட்டம் தொடங்கப்பட்டது.இதற்காக 950 ஊழியர்கள் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 2023 ஆம் ஆண்டு ரொட்டிப்பால் திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் 10 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.இதுவரை உயர்த்திய சம்பளத்தை வழங்கவில்லை. மேலும் கல்வித்துறை போல 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், உயர்த்தப்பட்ட சம்பளத்துக்கு ஒப்புதல் தராத துணை நிலை ஆளுநரை கண்டித்தும் ஊழியர்கள் கல்வித்துறை முன்பு கடந்த 4ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 5வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என ஆளுநரை எதிர்த்து கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் மகளிர் தினமான இன்று மகளிர்க்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்று ஆவேசம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

