முதுமலை, மாயார் ஆற்றில், வளர்ப்பு யானை காமாட்சி, நீந்தி விளையாடுவதை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாமா, 73, காமாட்சி, 63, ஆகிய வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகள் பல ஆண்டுகளாக இணை பிரியாத தோழிகளாக உலா வருகின்றன. மாலை நேரங்களில், மாயார் ஆற்றில் குளிக்க செல்லும், யானைகள் அவ்வப்போது, ஆற்றில் நீந்தி விளையாடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாலையில், வளர்ப்பு யானை காமாட்சி, மாயார் ஆற்றில், 45 நிமிடங்கள் நீந்தி விளையாடுகிறது. பாகன்கள் அழைத்தும் வருவதில்லை. பாகன்கள், ஆற்றில் நீந்தி சென்று அதனை கரைக்கு அழைத்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.