சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமானது பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி. 400 ஆண்டுகளாக நடைபெறும் இந்த யாத்திரைக்கு வித்திட்டவர்கள் நகரத்தார்.
அப்போது அவர்கள் சென்ற வயல் வரப்பு, கண்மாய் கரைகளில் காவடியுடன் செல்வதை இன்றளவும் கடைப்பிடிக்கிறார்கள். 160 கி.மீ. தூர யாத்திரையை 6 நாட்களில் நடந்து பழநிக்கு செல்கின்றனர்.நேற்று குன்றக்குடியில் கூடிய பக்தர்கள் அங்கு இருந்து யாத்திரையைத் துவக்கினர். நேற்று காலை நகரத்தார் காவடி கண்டவராயன்பட்டி பகுதிக்கு வந்தது. வரும் வழியான கண்டவராயன்பட்டி கண்மாய் கரையில் கற்கள் அதிகம். இதனால் நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்கள் பாதம் புண்பட்டு காவடி மாற்றப்படும் சூழல் ஏற்படும்.இதற்காக, கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த இளங்குமரன் (66) என்பவர், கற்கள் பக்தர்களின் பாதத்தை குத்தி விடாமலிருக்க கண்மாய் கரை முழுவதும் சிவப்புக் கம்பளம் விரிக்க ஏற்பாடு செய்திருந்தார். இரண்டரைக் கி.மீ.துாரத்திற்கு இந்த கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து இளங்குமரன் கூறுகையில், “22 வருஷமாக காவடி எடுத்துள்ளேன். உடல் நலம் இல்லாததால் நான் யாத்திரை செல்வதில்லை. கண்மாய் கரையில் நடக்கும்போது பக்தர்களின் பாதத்தில் கற்கள் குத்தி சில காவடிகள் மாற்றப்படுவதை பார்த்தேன்.இதனால் பக்தர்கள் சிரமமின்றி செல்ல என்னால் முடிந்ததை நான்கு ஆண்டுகளாக செய்கிறேன். இப்பகுதி பாரம்பரிய பாதைகளில் உள்ள புதர்களையும் அகற்றி சீராக்குவேன்” என்றார்.