கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், வருகிற டிசம்பர் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக டிசம்பர் 17, 18 தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு பேருந்து ரயில், விமான போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் வீடுகள், உடமைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பாதிப்புக்களை முதல்வர் நேரில் ஆய்வு செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ6000 நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் நிவாரணத் தொகை விநியோகப் பணியினை மேற்கொள்ளும் வகையில் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து ரேஷன்கடைகளும் டிசம்பர் 31ம் தேதி செயல்படும். அடுத்த நாளான ஜனவரி 1, 2024 அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.