
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 3-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி,தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பரவலாக பெய்தது.
தென்தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (மார்ச் 1) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (மார்ச் 2) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் மார்ச் 3-ம் தேதி, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
