• Sat. May 17th, 2025

கல்குவாரி அமைக்க பொதுமக்களே கலந்து கொள்ளாத கருத்து கேட்புக் கூட்டம்

ByAnandakumar

May 7, 2025

கரூர் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்களே கலந்து கொள்ளாத கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. குவாரி தரப்பு ஆட்களும், சமூக செயல்பாட்டாளர்கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த காட்டு முன்னூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தென்னிலை கிழக்கு கிராமத்தில் திருமுருகன் புளுமெட்டல் எனும் பெயரில் புதிதாக கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க கல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவால அவர்களால் அழைத்து வரப்பட்ட நபர்கள் கல் குவாரி வேண்டும் என்றும், இதனால் பலரும் வேலை வாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பேசிய சமூக செயல்பாட்டாளர்கள் 3 பேர் இந்த கல்குவாரி அனுமதி பெறுவதற்காக தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து இருப்பதாகவும், விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்தனர். முறையான அறிவிப்புகள் மற்றும் கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் குவாரியை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் யாரும் பங்கேற்காததால் இருக்கைகள் காலியாக இருந்தன. இதிலும், சமூக செயல்பாட்டாளர் முகிலன் பேசும் போது, கல் குவாரி தரப்பினர் கூட்டரங்கை விட்டு வெளியேறிச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் முழுவதுமாக சென்னையில் உள்ள மாசுக்கட்டுபாட்டு வாரிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அனுமதி தொடர்பான ஆணைகள் சென்னையிலிருந்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.