Youtuber சவுக்கு சங்கரை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தெரிவித்தார்.
துப்புரவு பணியாளர்கள் பற்றி Youtuber சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் youtuber சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்கள் பற்றி பேசியது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் கூறியதாவது..,
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களை அதிர்ச்சிர்க்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும், தூய்மை பணியாளர்களை குடிகாரர்களைப் போல் சித்தரித்து பேசிய அவரை, ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் தூய்மை பணியாளர்களாக உள்ள அருந்ததியர்களுக்காகத்தான் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இறந்து போனவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் மூலம் வந்திருந்த ராணுவ படையினர் கூட, மறுத்துவிட்ட நிலையில், இங்கிருக்கின்ற தூய்மை பணியாளர்கள் தான் அந்த உடல்களை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார். அந்த சம்பவத்தை கலைஞர் கண்டித்ததையும் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் ஒட்டுமொத்த சமுதாயத்தையே குடிகாரர்களாக சித்தரிக்கும் பணியை செய்திருக்கின்ற காரணத்தினால் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவித்தார். அது அவருடைய Action க்கு Reaction நடந்திருப்பதாக விமர்சித்தார். கடந்த காலங்களில் சீமான் போன்றவர்கள் அருந்ததிய மக்களை வந்தேறிகள் என்றும் தூய்மை பணி செய்வதற்காக தான் அழைத்து வரப்பட்டார்கள் என்றும் பேசி அதற்கான எதிர்வினையை எதிர்கொண்டதாக தெரிவித்த அவர் தற்பொழுதும் அது போன்ற செயல்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய சில விஷயங்களை தான் அவர்கள் பேசுவதாகவும் ஆனால் ஒன்றிய அரசியல் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவதாக தெரியவில்லை என கூறினார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம் என தெரிவித்த அவர் அது பற்றி இன்று மாலைக்குள் தெரியவரும் என கூறினார். கடந்த காலங்களில் சவுக்கு சங்கர் பெண்களை கூட கேவலமாக பேசி இருக்கிறார் குறிப்பாக அருந்ததிய மக்களை மட்டுமே குறிவைத்து தாக்குகின்ற செயல்களை இவர்கள் செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர் வேறு சமுதாய மக்களை தாக்குவதற்கு இவர்களுக்கு தைரியம் கிடையாது என தெரிவித்தார்.
யார் வீட்டில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என தெரிவித்த அவர் ஆனால் இதுபோன்று இழிவுபடுத்தும் பொழுது அம்மக்களின் மத்தியில் கோபம் எழுகிறது எனவும் அதேசமயம் இவர்கள்தான் இதனை செய்தார்களா என்று தெரியவில்லை என தெரிவித்தார். Youtuber என்கின்ற முறையில் அவர் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும், YouTuber என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற தோணி ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.
மேலும், இதுபோன்று இனிவரும் காலங்களிலும் பேசுவாரேயானால் ஆதித்தமிழர் பேரவை அவரை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கும் என தெரிவித்தார்.