• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

புதிய மதுபான கடை அமைக்க எதிர்ப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 17, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை புது பாலம் பகுதியில் கொடிமங்கலம் செல்லும் சாலையில் புதிய மதுபான கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியானது மேலக்காலிலிருந்து மதுரை செல்லும் முக்கிய சாலையாக உள்ள இங்கு பொதுமக்கள் பெண்கள் என தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு புதிய மதுபான கடை அமைக்க பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொடிமங்கலம் செல்லும் சாலையில் நாகர்தீர்த்தம் அருகே அரசு மதுபான கடையும் தேனூர் செல்லும் சாலையில் மற்றும் ஒரு அரசு மதுபான கடையும் உள்ள நிலையில் கூடுதலாக பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் மற்றுமொரு மதுபான கடை அமைக்க முடிவு செய்துள்ளதை பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இரவு நேரங்களில் பெண்கள் பேருந்தில் இருந்து இறங்கி மேலக்கால் ஊருக்குள் செல்வதற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணமாக செல்லக்கூடிய இந்தப் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் சமூக விரோதிகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படும். மேலும் அருகிலேயே குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகையால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேலக்கால் வைகை புது பாலத்தில் புதிய மதுபான கடை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுபான கடை அமைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பெண்கள் ஆகியோரை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.