கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்து முன்னணியினர் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டு கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட கோரி இந்து அறநிலையத் துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.