• Fri. Apr 26th, 2024

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.672 கோடி மதிப்பில் திட்டங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.671.80 கோடி மதிப்பிலான 75 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் 75 திட்டங்கள் ரூ.672 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களை சென்னையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; நெசப்பாக்கத்தில் உயர்தர மறுசுழற்சி நீர் நிலையம்; போரூரில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம்; புழல், புத்தகரம், சூரப்பட்டு மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்; அடையாறில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து நந்தனம் விரிவாக்கம், டர்ன் புல்ஸ் ரோடு ராதாகிருஷ்ணபுரம் குடிசை பகுதிகளுக்கான கழிவுநீர் திட்டப் பணிகள்;
சென்னை ஐஸ்ஹவுஸ், கிரீம்ஸ்ரோடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், டி.எஸ். பார்க், தாமஸ்ரோடு, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களின் மேம்பாட்டுப்பணிகள்; கிண்டி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் இடைமறித்தல் மற்றும் மாற்றுவழிகள் அமைக்கப்பட்ட பணிகள்; ஆலந்தூரில் சாலையோர நீரேற்று நிலையம்; மாம்பலம் கால்வாய் வழியாக அடையாறில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க தாடண்டர் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; கீழ்ப்பாக்கத்தில் நவீன குடிநீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனைக்கூடம்; நெசப்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள்; சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் மேம்பாட்டு பணிகள்; சென்னை, கே.கே. நகர், விருகம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் என மொத்தம் ரூ.398.51 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 18 முடிவுற்ற திட்டப் பணிகள்.
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 18 புதிய பூங்காக்கள்; அடையாறு ஆற்றின் கரையோரம் திரு.வி.க. பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை 30 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள்: மாதவரத்தில் 4 புதிய விளையாட்டுத்திடல்கள் மற்றும் அடையாரில் கோட்டூர்புரம் அடையாறு ஆற்றங்கரை அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்; தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், தரமணி, பெருங்குடி ஜல்லடையான்பேட்டை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 6 இரவு காப்பகங்கள்; ராயபுரத்தில் 2 சிறப்பு காப்பகங்கள்; தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 வீடற்றோருக்கான காப்பகங்கள்; ஆழ்வார்பேட்டையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனி தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதல் கட்டிடம், மாதவரம், சின்னசேக்காட்டில் ஈரக்கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையம் என ரூ.49.49 கோடி மதிப்பீட்டிலான 38 முடிவுற்ற சென்னை மாநகராட்சி பணிகள்.
பணிக்காலத்தில் உயிரிழந்த 29 பேரூராட்சி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 48 வாரிசுதாரர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 66 வாரிசுதாரர்களுக்கும் என மொத்தம் 143 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த தகவல்கள் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *