• Thu. May 9th, 2024

நாட்டையே அதிரவைத்த நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Byவிஷா

Apr 27, 2024

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர் மீது பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்ய, அதை அலட்சியம் செய்தது நிர்வாகம்.
அந்த நேரம், அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் மறைக்கப்படவிருந்த இந்தச் சம்பவம் அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டம், நீதிமன்ற வழக்குக்குப் பிறகு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுப்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கில் இன்னும் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ‘தாங்கள் அப்பாவிகள்’ பலிகடாவாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று முருகனும் கருப்பசாமியும் ஊடகங்களில் தெரிவித்து வந்தார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது. நிர்மலா தேவிக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் மாறிவந்த நிலையில், தற்போது அரசே அவருக்கு வழக்கறிஞரை நியமித்திருக்கிறது. இவர்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால் விசாரணையில் போது முருகன் மற்றும் கருப்புசாமி மட்டுமே ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், பேராசிரியர் நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், வழக்கை ஏப். 29-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *