பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சோழர்களை பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
நாவாலில் வரும் கதாபாத்திரங்களுக்காக பல மொழி ஸ்டார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் அரசர்களாகவும், இளவரசிகளாகவும், வீரர்களாகவும் ஜொலித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முன்னதாக வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்களும் வெளியானது. அதன்படி தனித்தனியே கதாபாத்திரங்களின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதற்கிடையே படத்தின் டீசர் குறித்த அறிவிப்பும் இன்று வெளியானது . இதன்படி ஹிந்தி டீசரை, அமிதாப் பச்சன், மலையாளம் மோகன்லால், தெலுங்கு மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் செட்டி, தமிழில் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.