கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் சிறு கடை நடத்தி வரும் ஏழை வியாபாரியின் இருசக்கர வாகனத்தைக் கில்லாடி நபர் ஒருவர் அலேக்காகத் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கச் சென்ற போது சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் அலட்சியமாகப் பதிலளித்துத் திருப்பி அனுப்பிய விவகாரம் பொதுமக்கள் இடையே மெகா கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
கோவை, மசக்காளிபாளையம் பகுதி சின்னசாமி நாயுடு வீதியில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சிறிய அளவில் கடை நடத்தி வாழ்வாதாரம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் கடைக்கு முன்பாகப் பூட்டி நிறுத்தப்பட்டு இருந்த இவரது இருசக்கர வாகனத்தைச் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மர்ம நபர் ஒருவர், நொடிப் பொழுதில் அலேக்காகத் தள்ளி திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளார்.
கடை வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த உரிமையாளர், வாகனம் மாயமானத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் வாகனம் கிடைக்காததால், உடனடியாகப் புகார் அளிப்பதற்காகச் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று உள்ளார்.
”நிறைய வேலை இருக்கு”… அலட்சியப்படுத்திய போலீசார்?:
காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரி தனது வாகனம் திருடப்பட்ட விபரீதம் குறித்துப் புகார் அளித்து உள்ளார். ஆனால் அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள், “எங்களுக்குத் தற்பொழுது நிறைய வேலைகள் இருக்கிறது. நீங்களே அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைச் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தால், அதை வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்துகிறோம்” எனக் கூறி அவரை அலட்சியமாகத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
வீடு, வீடாக சி.சி.டி.வி தேடும் ஏழை வியாபாரி:
போலீசாரின் இந்த அதிரடி அலட்சியப் பதிலால் மனமுடைந்த அந்த ஏழை வியாபாரி, வேறு வழியின்றித் தனது திருடு போன வாகனத்தைக் கண்டுபிடிக்கச் சின்னசாமி நாயுடு வீதியில் உள்ள ஒவ்வொரு வீடாகவும், கடைகளாகவும் ஏறி இறங்கி சி.சி.டி.வி காட்சிகளைப் பெற கண்ணீர் வடித்து வருகிறார்.




