சீர்காழி அருகே திருமணமான வாலிபர் கள்ள உறவால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35). இவருக்கும், அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜா (எ) ராமச்சந்திரனுடன் லட்சுமணன பழகி வந்துள்ளார். ராஜாவிற்கு சசிகலா மற்றும் சத்யா என்கின்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். தனது தந்தை வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால் லட்சுமணனுக்கு ராஜாவின் மனைவிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜாவின் மனைவிகளிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ள உறவாக மாறி உள்ளது. இதனை அறிந்த ராஜா லட்சுமணனிடம் தனது மனைவியுடன் ஏற்பட்ட கள்ள உறவை மறைப்பதற்கு ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர விட்டால் கொன்று விடுவதாகவும் தனது நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜாவின் மிரட்டலுக்கு லட்சுமணன் பயந்து சென்னை ஆவடி பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தலைமறைவான லட்சுமணனை ராஜா அவரது தந்தை சம்பந்தம், நண்பர் ராகுல் உள்ளிட்டோர் பல மாதங்களாக தேடி வந்துள்ளனர். இதனிடையே மேற்கண்ட நபர்கள் லட்சுமணன் மனைவி அஞ்சலியை சந்தித்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு அவரது கணவர் இருக்கும் இடத்தையும் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக மனைவி அஞ்சலி கொள்ளிடம் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவின் அடிப்படையில் இரண்டு தரப்பையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டு சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் பணம் கேட்டு லட்சுமணனுக்கு ராஜா, சம்பந்தம், ராகுல், அமுதா, முத்துலட்சுமி உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு லட்சுமணன் மனைவி அஞ்சலி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் வெட்டு காயங்களுடன் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய ராஜா (எ) ராமச்சந்திரன் மற்றும் அவரது தந்தை சம்பந்தம், தாய் அமுதா, நண்பர் ராகுல், உறவினர் முத்துலட்சுமி உள்ளிட்டோரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளிடம் காவல்துறையில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்த அடுத்த நாளே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காவலர்கள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக லட்சுமணன் மனைவி அஞ்சலி தெரிவிக்கையில்..,
ராஜா என்கின்ற ராமச்சந்திரன் மனைவிகளுடன் தனது கணவர் கள்ள உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்கு தன்னிடம் ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், இதனால் தனது கணவர் சென்னை ஆவடியில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும். இந்நிலையில் நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த பொழுது ராஜா மற்றும் அவரது தந்தை சம்பந்தம் ராகுல் உள்ளிட்டோர் அவரை கடத்தி சென்றதாகவும், உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்ததாகவும், காலை தனது கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.