• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குறுக்கு வழி அரசியல் வேண்டாம் பிரதமர் மோடி பேச்சு

நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம், நிலையான வளர்ச்சிதான் தேவை என்று பிரதமர் மோடி, நாக்பூரில் நடந்த ரூ.75 ஆயிரம் கோடி வளர்ச்சித்திட்டப்பணிகள் விழாவில் பேசினார்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மராட்டிய கவர்னர் பகத் சிங்,
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் முன்னிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- மராட்டியத்தில் இரட்டை என்ஜின் அரசின் வேகத்துக்கு இன்றைய விழா, ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த சம்ருத்தி விரைவுசாலையானது, நாக்பூர்-மும்பை இடையேயான தொலைவைக் குறைப்பதுடன், மராட்டியத்தின் 24 மாவட்டங்களை நவீன இணைப்புகளுடன் இணைக்கிறது. இது விவசாயத்துக்கும், பல்வேறு மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களுக்கும், தொழில்துறைக்கும் மாபெரும் நன்மையாக அமையப்போகிறது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாக்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, மாறுபட்ட உள்கட்டமைப்பு வசதியாக அமைந்துள்ளது. சம்ருத்தி விரைவு சாலை திட்டம், மற்றொரு விதமான உள்கட்டமைப்பு வசதி ஆகும். அதே போன்று, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும், நாக்பூர் மெட்ரோ ரெயிலும், வெவ்வேறு வகையான பயன்பாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். ஆனால் அவை அனைத்துமே ஒரு மலர்க்கொத்தின் வெவ்வேறு பூக்கள் மாதிரிதான். அவற்றின் வளர்ச்சி என்னும் வாசம், பெருந்திரளான மக்களைப் போய்ச்சேரும்.
கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் எல்லோரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மனநிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். இங்கே நாக்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையைக் கொண்டுள்ளன. இங்கே தொடங்கிவைக்கப்பட்டுள்ள 11 வளர்ச்சித்திட்டங்களும் மராட்டியத்தின் ஆபரணங்கள் ஆகும். வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொள்ளையடித்து, பொய்யான வாக்குறுதிகளுடன் குறுக்கு வழி அரசியல் செய்கிறவர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி, குறுக்கு வழி அரசியல் மூலம் வந்து விடாது. நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம். நிலையான வளர்ச்சிதான் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.